திங்கள், 7 அக்டோபர், 2013

கடலும்,கன்னிப் பெண்ணும்..

உன் கரம்பற்ற
நான் விரும்பும் அளவு-
என் கால் நனைக்க
கடலும்..


கரிப்புநீரோடு
கழிகிறது வாழ்க்கை 
எனக்கும் 
கடலுக்கும்.

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

கனவு சித்திரம்.

என் சிறு கனவொன்றை
சித்திரமாக்கினேன்.
அதன் விளக்கம்
ஒருவேளை
உங்களின் 
இன்றையக் கனவில் 
வியாபித்திருக்கலாம்...!!

மழை - சில குறிப்புகள்.

ஆகாயம் மேகத்தால் 
மண்ணுக்கு இட்டது முத்தம்.
மழை.
மின்னல் வெட்டியதில் 
கிழிபட்ட மேகத்தின் குருதி-
மழை.
விடாது பெய்வது 
பிழையென்றாலும் 
அதையும் சொல்கிறார்கள் 
மழை.
பகலில் காண நேர்ந்தது 
பேய் ரூபம்-
மழை.

ஓய்ந்து விட்டாலும் 
ஒழுகியபடி தொடர்கிறது 
ஓலைக்  குடிசைக்குள் 
மழை.

என் ஒற்றை பொண்டாட்டியே..

ஒரு நாளில் தீருமா கோபம் என்
ஒத்தைப் பொண்டாட்டியே..??
ரெண்டு நாளாகிடுமா உன்
ரெடிமேட் சிரிப்புதிர...??
மூன்று நாளில் முடித்துன்
முகம் திருப்பிப் பாராயோ..??
நான்கு நாள் நீடித்தால் என்
நாக்கு செத்துப் போகாதோ..??
அஞ்சாம் நாள் அச்சமொன்று
அத்தான் மனதில் படராதோ..??
ஆறாம் நாளும் உன்கோபம்
ஆறாமல் போய்விட்டால்
ஏழாம் நாளும் அதற்கடுத்தும்
என் செய்வேன் ஏந்திழையே..??
முகம் பார்க்காவிடினும் என்
முகநூல் பக்கம் பார்த்துவிடு.
என்னிந்தக் கவிதைக் கண்டு
மன்னித்து கோபம் தீர்த்துவிடு.

மறந்த நாளில்..

மழை வந்ததாலா அறியேன் எனினும்
மனம் நிறைந்தது மகிழ்வினில்-நீ
குடையென்பதை மறந்த நாளில்...

தங்கம் என வியந்தேன் மங்கையுன்
அங்கம் -உடுத்தியிருந்த உடையொருத்
தடையென்பதை மறந்த நாளில்..

புரிந்துக் கொண்டேன் அன்று நானும்
பிரம்மன் படைத்ததுன்னை- அவன்
இடையென்பதை மறந்த நாளில்..

மறைந்து நீ போனபின்பும் மழை
தொடர்ந்து பெய்தவண்ணம்- நான்
நடையென்பதை மறந்த நாளில்..

புதன், 25 செப்டம்பர், 2013

நகரம் முழுவதும்
பரவலாய்
தேய்ந்திருந்தன வீடுகள்.

காணாமல் போயின
ஒவ்வொன்றாய்
ஒவ்வொன்றாய்-
கலகலப்பு படிக்கட்டுகள்.

வீடடைந்தவன்
வண்டியிலிருந்து இறங்காது
வண்டியோடு
வீட்டுக்குள் இறங்கியதைக் காண

நினைவில் வந்து போனது-

நாலுபேர் சேர்ந்து
நண்பனின் அண்ணன் பைக்கை
ரோட்டிலிருந்து
வீட்டுக்குள் ஏற்றியது.

பால்கனியில் நின்றவர் கையில்
தினசரியை திணித்துப் போனான்
பேப்பர்காரப் பையன்.

அரசியல்வாதிகளால்
நாடு வளர்ந்ததோ இல்லையோ
ரோடு வளர்ந்தது மேலே
அவர்களின் பினாமிகளால்.

நீரூற்றி காடு
வளர்த்தார்களோ இல்லையோ
மேலே மேலே
தாரூற்றி ரோடு வளர்த்தார்கள்.

வீதிகள் வளர்கின்றன-
அடுத்து ஒரு புரட்சிக்கான
மேடைகளாக.

விளக்கு

நீ ஏற்றிய 
இத்தனை அகல்விளக்குகளினும் 
என்னை கவர்ந்தது 
காதல் சுடரேந்திய 
உன் அகலக் கண்விளக்கே..!!