புதன், 31 அக்டோபர், 2012

முதல் இரவு.







காமன் திருவிழாவில்
வழக்கமாகிவிட்டது
காணாமல்போவது
உடைகளுக்கு.

நான் மேலே..நீ கீழே..
நான் கீழே..நீ மேலே..
ராசலீலை ராட்டினம்
கனஜோராய் சுழல
மூச்சு வாங்குகிறது நமக்கு.

கட்டில்போரின்
எந்த கணத்தில்
உன் கால்கொலுசு என் முகத்தையும்
உன் கைகளின் உடைந்த
கண்ணாடிவளை என் கால்களிலும் கீறியது..?

தீராத சந்தேகங்களோடும்,சந்தோஷங்களோடும்
தீர்ந்தது அந்த முதல் இரவு.  

ரகசியங்களாலான கணங்கள்.








பேசமறந்து நீ இருக்கும் தருணங்கள்
உண்மையில் அபூர்வமானவை.
அழகற்றவையாக இருந்தாலும்.

துடிதுடிக்கும் உன் இதழ்களும்
படபடக்கும் உன் இமைகளும்
என் கேள்வியின் பாரத்தை
எனக்கு நன்றாகவே உணர்த்துகின்றன.

எனக்கும் பயத்தையே ஏற்படுத்துகின்றன
உன் மௌனத்தின் பேரிரைச்சல்.

வார்த்தைகளை நீ மென்று விழுங்க 
கவிதையாய் அசைகிறது தொண்டைக்குழி.
ஏனோ ரசிக்க விடவில்லை
ரகசியங்களாலான இந்த கணங்கள்.

என்றாவதொரு நாள் எட்ட
நின்றாவது நான் இப்படி கேட்டிடலாமென்று
ஓராயிரம் ஒத்திகைகள் நீயும் பதிலளிக்க
பார்த்துவைத்திருக்கலாம்.

உன் இதழோரம் கசியும் புன்னகை அதை
ஊர்ஜிதபடுத்துவதாகவேப்படுகிறது எனக்கு.

ஈர்ப்பு



உன்னைவிட நீ என்னையும்
என்னைவிட நான் உன்னையும்
அதிகமாய் விரும்புவதற்கு 
அடிப்படை காரணம்
உனக்கு தங்கத்தின் மீதும் 
எனக்கு கவிதைகள் மீதுமுள்ள
ஈர்ப்பாய் இருக்குமோ..

செவ்வாய், 30 அக்டோபர், 2012

இழப்பு.








வெல்ல அவசரப்படவேண்டியது காதல்.
மெல்ல அனுபவிக்கவேண்டியது வாழ்க்கை.

ஆனாலிங்கு

வெல்ல அவசரப்பட்டு வெல்லாமல் வாழ்க்கையையும்
மெல்ல தனக்குள்ளேயே அனுபவித்து
                                                  சொல்லாமல் காதலையும்..

இழப்பவர்களே அநேகம்.

வாசனை ரகசியம்.




நீரோடு சேர்ந்து
உன் வியர்வைத்துளிகளும்
வேருக்குள் பாய்ந்திருக்க வேண்டும்.

இல்லையெனில்
இப்பூக்களிடம்
எப்படிவரும்
இத்தனை வாசம்..!!

கடவுளின் செல்லப் பிராணி.

எங்களை கண்டவுடன்தான்
எத்தனை உற்சாகமாய்
ஓடி வருகிறாய் நீ.

கால்கள் நக்குவதும்..
பின்வாங்கி ஓடுவதும்..
மீண்டும் வேகமாய்வந்து
இடுப்பில் தாவி ஏறுவதும்..

நளினமிக்க
நடனம் போல் இருக்கிறது..

கட்டியிருக்கும்வரை கவலையில்லை.

கட்டவிழ்த்துவிட்ட நாளில்  நீ செய்த 
கபளீகரங்கள்  நினைவிலிருப்பதால் 
நுரைத் தள்ள ஓடிவரும் வேகத்திற்கு
அனைவரும்
மிக பயந்துதான் போகிறார்கள்.

அவிழ்த்து விடவேண்டாமென்று
வீட்டு சொந்தக்காரரிடம் வேண்டி
விண்ணப்பம் வைப்பதைத் தவிர
வாடகைக்கிருப்பவன் வேறென்ன செய்யமுடியும்..??

தேவதையை குழப்புபவர்கள்.

பேருந்திலிருப்பதை காட்டிலும்
நெரிசல் அதிகம்
இந்த பேருந்து நிறுத்தத்தில்..!

பேருந்துக்கு காத்திருப்பவர்கள்
அதில்
பேருக்கு ஓரிருவர்தான்.

நிழற்குடை தந்தவரைகாட்டிலும்
குடைநிழலில் வரும் உன்பெயர்தான்
சிலாகிக்கப்படுகிறது அதிகமிங்கு.

தூரத்தில் நீ வரும்போதே
நாகரிகமும்,கண்ணியமும்,
துளிர்விடத் துவங்கிவிடுகிறது
போலியாகவாவது.

உன் தரிசன பிச்சைக்காக
காத்திருப்பதால்
பிரயாணி எனும் பதம் இங்கு
யாருக்கும் பொருந்தாமல்போய்
பிச்சைக்காரர்களின் கூடாரமாகிவிட்டது-
பேருந்து நிறுத்தம்.

பேருந்து நிறுத்தத்தில் சரியாய்
பேருந்தை நிறுத்தும் உன் பேரழகு.  

ஏறாதவர்கட்கு உன் தரிசனம்போதும்-
அன்றைய நாளை
ஆனந்தமாய் கடப்பதற்கு.

ஏறியவர்களிலோ
காதலிக்கவும் உன்னை யாரும் முனைந்ததில்லை.
குறைந்தபட்சம்
உரசிப் பார்க்கவும் உள்ளத்தாலும் நினைந்ததுமில்லை.

வரமா இல்லையிது சாபமா எதுவென்று புரியாமல்
வந்துபோய் கொண்டிருக்கிறாய் நீயும் தேவதையாய்..




அந்தப்புர அந்தாதி.






                                         எத்திரை இட்டு விழிகளை மறைத்தாலும்
                                         சித்திரை பூம்பாவை சிரித்தாடி ஓடி வந்து
                                         முத்திரை ஒன்றை என் முகத்தில் பதித்திடவே
                                          நித்திரையில் வருவாள் நிதம்.

அந்தப்புர அந்தாதி.






                             நிலைத்த உறுதியோடு நினைத்தவளின் கரம்பற்ற
                            முளைத்த இன்னல்களை முறியடித்த மகிழ்ச்சியில்
                             திளைத்த என் முகத்தை பெரும் பூரிப்போடு-கவிழாது
                             மலைத்து நோக்குமுன் மார்பு.

அந்தப்புர அந்தாதி.



                                    கல்லால் வடித்திருந்த சிலைகளிலும் சிற்பி
                                    வில்லாய் வளைத்திருந்தார் இடையழகை-தமிழ்ச்
                                    சொல்லால் உன்னழகை வர்ணித்த நான் சொல்வேன்
                                     இல்லாதது உனக்கு இடை.

அந்தப்புர அந்தாதி.


                                      வண்ணத்தால் கருத்தவண்டு வழியும் மதுக்
                                      கிண்ணத்துள் வீழ்ந்து மயங்குதல் போலென்
                                      எண்ணத்துள் போதையேறி நான் வீழ்ந்ததுன்
                                      கன்னத்தில் விழுந்தக் குழி.


அந்தப்புர அந்தாதி.

 
                              வாளினையொத்த விழியாளே கவிஞர்கூட்டம்
                              தாளினில் வடித்த கவிதையாமுன் பேரழகை-எந்த
                              நாளினில் மங்கலநாண் பூட்டி அடைந்துன்
                              தோளினில் கொள்வேன் துயில்.

பயணம்.

பயணம் பெருக மனதில் தோன்றும் ஐயங்கள் குறையும்.
பணயம் வைக்க நமக்குத் தோன்றும் பயங்கள் மறையும்.
அணையுமிட்டு அறைக்குள் சுருங்க சுயமும் தொலையும்.
அன்றே அட அன்னையவள் நிலவைக் காட்டினாள்.-அங்கு
சென்றேவரும் எண்ணம்தனை சோறோடு ஊட்டினாள்.

மலராபரணம்



 மணமேடை காணா
மங்கையர் இனம் அறவே இல்லை.
கூந்தலுக்கு மட்டுமல்லாது
மேனிக்கும் மலராபரணமே என்றிருந்ததால்.

நாளொரு மலரும்,பொழுதொரு மணமுமாய்
மங்கையர்.
மணந்தவரும்
மலரோடு சேர்ந்த நாராய் மணந்திருந்தார்.

செய்கூலியின்று செய்யப்பட்ட ஆபரணங்கள்
அன்றன்று இரவுகளிலேயே
சேதாரமாகி தள்ளுபடி செய்யப்பட்டன.

வண்ணத்துப் பூச்சி,வண்டு விரட்டுவது
வீடுகளில் பெரும் சவாலாய் இருந்தது.

நந்தவனமே நகர்வது போலிருந்தது -
வைபவமொன்றில் கூடிய
நங்கையரை மேலிருந்து நோக்குங்கால்.

தங்கநகைகள் தரித்து அங்கொருத்தி
தாரகைபோல் தகதகக்க
திடுக்கிட்டு எழுந்தான் தூக்கத்திலிருந்து
அஞ்சுப் பெண்களை பெற்ற அய்யாசாமி.

திங்கள், 29 அக்டோபர், 2012

கிராமத்தோடு ஒரு கண்ணாமூச்சி.

நமக்கொன்றும் இல்லை அங்கெனினும்
பால்ய நினைவுகளை மீட்டெடுக்க
தவிர்க்க முடியாததாகி விடுகிறது
தாத்தா ஊர்நோக்கி ஓர் பயணம்.

பச்சை பசேலென்றிருந்த ஊர்
பல வண்ணத்தில் இருந்தது
பல்கிப் பெருகிய வீடுகளால்.

அடையாளம் மறைத்துக் கொண்டு
என்னோடு கண்ணாமூச்சி
ஆடத் தொடங்கிவிட்டது ஊர்
ஆலமரம் காணாமல் நான்
திடுக்கிட்ட இடத்திலிருந்தே.

ஆடிக் களித்த மைதானங்கள்
ஓடி ஒளிந்த திண்ணை வீடுகள்
இன்று எனக்கு
ஆட்டம் காட்டுகின்றன ஒளிந்தபடி.

தேடித் தேடி நானே
காணாமல்போன கணத்தில்
கண்டுபிடித்து என்னை மீட்டது
குஜிலி அம்மாவின் குரல்...
''நீ.. ரயில்வே தாத்தா பேரன்தானே..''

தொந்திரவில்லாமல் கண்டுப்பிடித்தது
தொகுப்பு வீடுகளுக்கடியில்
தொலைந்துப் போன ஏரியை மட்டும்தான்.
அதனருகில் குடியிருந்த
ஏரிக்கரை பிள்ளையாரால்..!!

அடுத்தமுறை
உன்னிலிருந்தே துவக்குகிறேன்
ஊரோடான கண்ணாமூச்சி விளையாட்டை...     








செல்லரிக்கும் உண்மை








இருக்குமிடம் ஒன்று.
இருப்பதாய்
சொல்லுமிடம் ஒன்று.

நம்பிப் பேசிக் கொண்டிருப்பவர் காதில்
நயமாய் விதைக்கப்  பொய்யை
இப்படித்தான்-
''செல்''லரித்துப் போகிறது உண்மை

பரிசு.







உனக்கு
மலர் ஒன்று தருவதா..
அல்லது
மலர்கொத்து தருவதா ..
என நான் யோசித்துக் கொண்டிருக்கையில்
மழையை அனுப்பி
உனை குஷிப்படுத்தி
எனை
முந்திக் கொண்டது மேகம்.

காலம் செய்த கோலம்.



அடுப்படியில் வெந்து நூலானது அந்தக்காலம்.
இடுப்பொடிய
கம்ப்யுட்டரில் நொந்து நூலாவது இந்தக்காலம்.
பெத்துப் போடும் மெஷீனாக
சத்திழந்து வாழ்ந்தது அந்தக்காலம்.
வெத்துப்பேப்பர் மெஷீனோடு
செத்துப் பிழைப்பது இந்தக்காலம்.
மாமனார்,மாமியாருக்கு
அடங்கிப் போனது  அந்தக்காலம்.
மானேஜேர்,ப்யுனுகெல்லாம்
நடுங்கிப் போவது இந்தக்காலம்.
வீட்டைப் பெருக்கி,விளக்கை ஏற்றி
வசந்தம் கூட்டியது அந்தக்காலம்.
வசதிகள் பெருக்கி வாலிபம் கருக்கி
கசந்துக் கழியுது இந்தக்காலம்.

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

தேவதை வீதி.

விடியலில் கோலமிட
வாசலுக்கு அவள் வருவாளென
வெளியில் காத்திருக்கும்
எங்கள் தெருப் புள்ளிகள்.
**********    ********    ***********
வீதியில் விளையாடும்
குழந்தைகள் குறித்து
விசனமில்லை
வீட்டில் உள்ளோர்க்கு-
வேகத் தடையாய்
வாகனங்களுக்கு
அவள் வீடு இருப்பதால்.
*******     ******     ************
தபாலே வருவதில்லை
இப்போதெல்லாம்
எவருக்குமிங்கு.
எனினும்வருகிறார்
 தபால்காரர்
அவள் வீட்டில்
தண்ணீர் குடிப்பதற்கு.
*********     ******   **********
எண்ணோ,நிறமோ,வடிவமோ
எதுவுமே தேவையின்றி
அவளே அடையாளமாகிறாள்
அந்த வீட்டிற்கு.
********    ********    *********
எங்கள் தெருவில்
அனைவருக்கும் தெரிந்தது
அவள் இல்லத்தில்
 யார்யார் உள்ளார்கள் என்பது.
யாருக்கும் தெரியாதது
அவள் உள்ளத்தில்
யார் உள்ளார்கள் என்பது..
*******   **********   ***********

ச்சீப் போ..







சிறு வயதில்
செல்லமாய் சீண்டியபோது
ச்சீப் போ என்றாய்
நாணத்தில்..

சில்மிஷமாய் காதில்

சிலவிஷயம் சொன்னபோது
ச்சீப் போ என்றாய் - காதல்
அஞ்ஞானத்தில் ..

கட்டிலறைக் காலத்தில்
கணக்கேயில்லை நீ சொன்ன
ச்சீப் போ விற்கு -காம
மோனத்தில்..

அந்திமக் காலத்தில்
அடியேய் நானே உனக்கு
ச்சீப்போ என்றாகிவிடுவது -எந்தக்
கோணத்தில்..??

சில பிணக்குகளும்..சீராகாத கணக்குகளும்..

                                

மொத ராத்திரி வேளையிலே
சீர் கொறஞ்ச சுணக்கத்துலே
பாவமுன்னுப் பாராமே
கோவமதும் கொறையாமே
செஞ்சீங்க என்கிட்டே வம்போவம்பு.
அங்கே மொனமுறிஞ்சு
மூலையிலே மன்மத அம்பு.

ஆத்தா பேச்சே கேட்டு
ஆதாரம் கேட்காமே
சம்சாரம்னு பாக்காமே
சாத்தா சாத்துனீங்க-என்னை
சாத்தான்னு ஏசனீங்க.-நம்மை
சேத்துவெச்ச சாமி மொகத்தில்
சேத்தத்தான் பூசனீங்க.

பொங்கவெச்ச சோத்துலே
பொடிக் கல்லு இருந்ததுக்கும்
பொட்டப்புள்ள ரெண்டு
தொடர்ச்சியா பொறந்ததுக்கும்
விழுந்த அடிக்கு நான்
விழிநீர் வடித்ததில்லை.
பாசமன்றி வேறொன்றை-இந்தப்
பாவிமகப் படித்ததில்லை.

ஒருக்களிச்சு படுத்து
ஒன்னை நினைக்கையிலே
ஓரக் கண்ணில் வழிஞ்ச நீர்
தலையணையை நனைக்கையிலே
ஈரம்தான் ஆனதய்யா உள்ளிருந்த
இலவம்பஞ்சு..
தாரம்நான் எதிர்பார்த்தேன் அப்படியோர்
ஈர நெஞ்சு.

தமிழ்

                                                                         
                                                                   தமிழ்


                                            உதிரத்தில் கலந்தது தமிழ்.
                                       உள்ளிழுத்து விடும் மூச்சு தமிழ்.
                                   உணர்வாய்,உயிராய் இருப்பது தமிழ்.
                                        தமிழுக்கு கேடு நினைப்பவனை
                                                              நீரில் அல்ல-
                                                        

                                                        அமிலத்தில் அமிழ்.




மழை பாடம்.



                                                    காய்ந்த கிணற்றை நிரப்பியது
                                                            என்று கணவன் மகிழ
                                                    காய்ந்த வற்றலை நனைத்தது
                                                            என்று மனைவி சபித்தாள்.
                                                               

                                                            மழை பெய்தே ஓய்ந்தது.

மன வாசனை.

வாவென்று வேண்டுகிறோம்.
வந்தால்
வாசல்கதவோடு சேர்த்து
சன்னலையும் சாத்திக் கொள்கிறோம்.

வருத்தப்படாத
வித்தியாச விருந்தினன் நீ.

முன்வாசலில் மரம்செடிகளுக்கு
முத்தங்களை இறைத்துவிடுகிறாய்.
பின்வாசலில் காய்ந்தக் கிணற்றை
முடிந்தவரை நிறைத்து விடுகிறாய்.

மூடிய ஜன்னல்களுக்குள்
கப்பல்கள் தயார்
கத்தியின்றி,கத்திக் கொண்டு..

விளையாட விடாதவருத்தத்தில்-

மழையே,மழையே போ.. போ..
குட்டிகளின் கலாட்டா
ஆங்கிலத்தில் கத்திக் கொண்டு.

நிராகரிப்புகளால்
நீ வடிக்கும் கண்ணீர்
தனியேத் தெரிவதில்லை.

முதன்முறை
மண் வாசனையோடு உன்
மன வாசனையும் முகர்ந்தேன்.

சோற்றில் கைவைக்க அமர்ந்தவன்
எழுந்து சட்டையிட்டு
சேற்றில் கால்வைத்து வெளிவந்தேன்.

ஜலதோஷத்திற்கு பயந்து
வீடுள்ளவர்கள் வீட்டினுள்ளே-
சுவர்களே நனைந்தபடி.

சந்தோஷமாய் ஆட்டத்தோடு
வீடற்றவர்கள் ரோட்டினிலே-
அவர்களே நனைந்தபடி.

வாவென்றதும் வந்த மாமழையே
பூமி நோக்கி விரைந்தபடி நீ..
ஆரத் தழுவிக் கொள் என்னை
வானம் நோக்கி கரைந்தபடி நான்..

சனி, 27 அக்டோபர், 2012

இருப்பை பொறுத்து..

அருங்காட்சியகத்தில் கவர்ந்ததென்னை
அவ்வளவு கலையம்சத்தோடு அது.

இறைச்சி,மீன் கடையில்,அடுக்களையில்
பசி,ருசியை தூண்டும் வேலையேப் பார்த்தது.

முதன்முதல்
நாவிதர் பிரயோகப்படுத்தியபோதும்
கலவரப்படுத்தவில்லை.

காரணமின்றி குடிபோதையில்
காற்றைக் கிழித்தவண்ணம்
கடைத் தெருவில் கலாட்டா செய்பவன்
கையில் கண்டபோது அத்தனை
அச்சுறுத்தலாயிருந்தது அது-
 
அந்த
முரடனின் முகத்தில் தாண்டவமாடிய
மூர்க்கம் அதில் பிரதிபலித்ததால் .

வெள்ளி, 26 அக்டோபர், 2012

நாணத்தின் தடம்.





                                                                  மழை நாளில்
                                                              யாரைக் கண்டு யார்
                                                         தன் கால்கட்டை விரலால்
                                                               நாணத்தில் போட்டது
                                                          வானத்தில் வானவில் எனும்
                                                                 அரைவட்டக் கோலம்..!!

கடவுள் வந்திருந்தார்.

கடவுளை அழைப்பதற்கும்
என் கைபேசியில் எண்ணிருந்தது.

உதவிக்கு அழைத்தபோதெல்லாம்
உடனே உடனே வந்தார்.

பிரச்சனைகளைக் கேட்டுவிட்டு
முடித்துவிடலாம் என்பார்
பெரிதாய் அலட்டிக்கொள்ளாமல்.

தீர்வு சொல்ல அவர்
ஆரம்பிக்குமுன் அடுத்த அழைப்பு.

உடனே உடனே போய்விடுவார்.

இன்னும் எத்தனை புண்ணியவான்களிடம்
இவர் எண் இருக்கிறதோ..??

திட்டுங்கள்..தீர்க்கப்படும்..

தன் அப்பா தன்னை
அடிக்காத நாளில்லையென்று
என் அப்பாவிடம் கூறுவாராம்
அவர் அப்பா.
சூடுக் கூட வைத்துவிடுவாராம்.

தானும் தன் அப்பாவிடம்
வாங்குவதுண்டாம்
அடி அவ்வப்போது.

அனாவசியமாய்கை நீட்டமாட்டார்
என் அப்பா.

அவசியத்திற்குக் கூட
அடிப்பதில்லை நான்
ஒரே மகன்என்பதால்.
 
திட்டித் தீர்த்துவிடுகிறேன்,

நன்றாகவே பயன் தருகிறது
உடனே ஆறிவிட்டாலும்
நாவினாற் சுட்ட வடு.

வியாழன், 25 அக்டோபர், 2012

நடுநிசி நாய்கள்.

எப்போதாவது
நேரிட்டு விடுகிறது இந்த
நடுநிசி நாய்களை எதிர்கொள்வது.
 

வெறும் பயம் கலந்த மிரட்டலாலா
வழியில் தென்படும் கற்களாலா..
எதனால்
அவைகளை சமாளிப்பதென்பதை
அவைகள்தான் நிர்ணயிக்கின்றன.
 

கும்மிருட்டில் காலருகில்
திடீரென அவை
குலைத்தபடி நெருங்கும்போது
உச்சந்தலையில் தோன்றும் ஜில்லிப்பு
உண்மையில்
நவரத்னா எண்ணையல்லாது
நாய்களால் மட்டுமே தர இயலும்.
 

அடுத்தத் தெரு நாய்களிடம்
தம்மை ரணமாக்கிக் கொள்ளாது
அவைகள் தம்
எல்லை வந்ததும் விலகிக் கொள்வது
அந்த இருட்டிலும் நமக்கு
ஏதோ ஒரு வெளிச்சத்தை பாய்ச்சுகிறது..
 

விடாமல் அவை குரைக்கின்றன.
எனினும் அவை
விளக்கில்லா வீதியின்
வேறு சில பயங்களை குறைக்கின்றன.
 

அந்த குலைத்தலில்
நான் வேகமாக விரைகிறேன் வீடு நோக்கி..
இரவு வேகமாக கரைகிறதுவிடியல் நோக்கி..

திருத்திச் சொல்.

அம்மாவிடம் எனக்கு
அலாதி பயம் என்று
நான் சொல்வதுபோல் இருந்தது

என் மேல் காதலில்லை என்று
நீ என்னிடம் சொன்னபோது.

அதைவிட உன்
அப்பாவிடம் உனக்கு
அலாதி பயம் என்று கூறியிருக்கலாம்.

ஒன்று தெரியுமா..
உன் உதடுகள்
பொய்யாக உளறினாலும்
உன் விழிகள்
மெய்யை பேசி விடுகின்றன.

கடலை..!!





                                           இன்னும் என்னென்ன செய்வார்களோ
                                                                கடற்கரையில்..
                                                            அமர்ந்து ரசித்தபடி..
                                                          கொறித்து ருசித்தபடி..
                                                             போட்டு சிரித்தபடி..
                                                                       கடலை..!!

கண்ணாடி.

ஆயிரம் நண்பர்களில்
அந்தரங்கமானவன்.

நாமறியா நம் மச்சத்தை

நாம் பார்க்கத் தருவான்.

ஓராயிரம் ஒத்திகைகளில்
ஓகே இவன் சொன்னவைகளே
ஒத்துப் போகும் நமக்கு.

நாளும் பொழுதும் நம்மை
நாம் இவன் வசமிழந்தால் -
நாளாவட்டத்தில் இவனோ
தானே தன் ரசமிழப்பான்.

தீராத விளையாட்டு.



                                                     அவற்றையெல்லாம்
                                                   உதாசீனப்படுத்திவிட்டு
                                             குட்டி குட்டிப் பிள்ளைகளோடு
                                               நானும் குட்டிப் பிள்ளையாகி
                                                        விளையாடுகையில்
                                                     தானும் குட்டியூண்டாகி
                                                    தளராதுக் காத்திருக்கிறது
                                                        என்னோடு விளையாட
                                           என் ஆயிரமாயிரம் பிரச்சனைகள்.!!

''என்கௌண்டர்''





                                                 எத்தனை முறை கண்டித்தாலும்
                                                      மீண்டும் மீண்டும் நிகழும்
                                                          சொரணையற்ற ''சூடு''..

நீயும் ஏன்..??





                                           காதலிக்கும் பெண்ணை
                                            காததூரத்தில் கண்டதும்
                                              என் இதயம் தான்
                                               அப்படி ஆகிறதென்றால்
                                                 சாலையோரத்து
                                                  மரத்தின் இலைகளும்
                                                      ஏன் அப்படி படப்படக்கின்றன...?!

சன்னலோர மழை


                                                              சன்னலோர மழை 
                                                    ***************************************

                                                     கைபேசியில் காதலியின் கொஞ்சல்..
                                                     கையில் அம்மா தந்த சூடான டீ..
                                                     சன்னல் வழி ரசிக்கும்போது
                                                                           இன்னும்
                                                           சுவாரஸ்யமாய் இருக்கிறது
                                                          சோவென்றுப் பெய்யும் மழை...

பொண்ணும் ..பொன்னும்..

                                               

                                               தன்னை பார்க்கிறானோ என்றும்
                                               தன் பொண்ணை
                                               பார்க்கிறானோ என்றும்
                                               பதறும் பெண்களை மேலும்
                                               கிலியேற்றி வைத்திருக்கிறது
                                               விலைஏற்றத்தால் தங்கம்
                                                தன் பொன்னை பார்க்கிறானோவென்று ...
அழிய மறுக்கும் கோலங்கள்..
*******************************

நெஞ்சில் இருந்துக் கொண்டு

நினைவுக்கு வர மறுக்கும்
சில குறிப்புகள்..
நினைவுக்கு வர மறுக்கும்
நேற்றையக் கனவு..
நினைவுக்கு வர மறுக்கும்
நிலுவையிலுள்ள கடன்..
நினைவுக்கு வர மறுக்கும்
நண்பனின் ஈமெயில் முகவரி..

என
நினைவுக்கு வர மறுக்கும்
நீளப் பட்டியலில்
நிரந்தர இடம் பிடிக்கட்டும்
நிராகரிக்கப்பட்ட என் காதலும்..
நிராகரித்த என் காதலி முகமும்..

நரி மறைந்த நந்தவனம்.

                                      
                                        டீச்சர் போட்ட அதட்டலில்
                                         வடை சுட்ட பாட்டி வெளியேற
                                          அப்பாவி காகம் பறந்துப் போக
                                            ஏமாற்றிய நரி மட்டும்
                                             அமைதியானது போல் நடித்த
                                                 குழந்தைகளிடையே
                                                   மறைந்துக் கொண்டது...!!!

புதன், 24 அக்டோபர், 2012

பரிதவிப்பு






                                                           காதலன் தோளில் சாய்ந்து
                                                           காதல் மொழி பேசுகையில் -

                                                           வீட்டிற்குள் இருந்து வாசலுக்கு
                                                           வந்து வந்துப் போய்
                                                           எனக்காக பரிதவிக்கும்

                                                           என் அம்மாவை
                                                           அபிநயித்துக் காட்டுகிறது அலை..!!

தீக் குச்சிகள்

                                                       
                                                                 யாருக்கோ எதற்கோ
                                                                 வெளிச்சம் தர
                                                                 எத்தனை குழந்தைகளின்
                                                                 வாழ்வை
                                                                  இருட்டாக்கிவிட்டு வந்துள்ளன

                                                                  இந்த வத்தி குச்சிகள்..!!
                                                                  

பிள்ளையார் துணை.

                                                         பிள்ளையார் துணை.
                                                         *************   ********

                                               மயில்வாகனத்தில் முருகன் பறக்க
                                               கயிலாயத்தில் தாய்தந்தை சுற்றி
                                               ஒயிலாய் மாம்பழம் பெற்றமர்ந்தோனே
                                                நீயிலாது யாராவார் குரு..