பேருந்திலிருப்பதை காட்டிலும்
நெரிசல் அதிகம்
இந்த பேருந்து நிறுத்தத்தில்..!
பேருந்துக்கு காத்திருப்பவர்கள்
அதில்
பேருக்கு ஓரிருவர்தான்.
நிழற்குடை தந்தவரைகாட்டிலும்
குடைநிழலில் வரும் உன்பெயர்தான்
சிலாகிக்கப்படுகிறது அதிகமிங்கு.
தூரத்தில் நீ வரும்போதே
நாகரிகமும்,கண்ணியமும்,
துளிர்விடத் துவங்கிவிடுகிறது
போலியாகவாவது.
உன் தரிசன பிச்சைக்காக
காத்திருப்பதால்
பிரயாணி எனும் பதம் இங்கு
யாருக்கும் பொருந்தாமல்போய்
பிச்சைக்காரர்களின் கூடாரமாகிவிட்டது-
பேருந்து நிறுத்தம்.
பேருந்து நிறுத்தத்தில் சரியாய்
பேருந்தை நிறுத்தும் உன் பேரழகு.
ஏறாதவர்கட்கு உன் தரிசனம்போதும்-
அன்றைய நாளை
ஆனந்தமாய் கடப்பதற்கு.
ஏறியவர்களிலோ
காதலிக்கவும் உன்னை யாரும் முனைந்ததில்லை.
குறைந்தபட்சம்
உரசிப் பார்க்கவும் உள்ளத்தாலும் நினைந்ததுமில்லை.
வரமா இல்லையிது சாபமா எதுவென்று புரியாமல்
வந்துபோய் கொண்டிருக்கிறாய் நீயும் தேவதையாய்..