புதன், 25 செப்டம்பர், 2013

நகரம் முழுவதும்
பரவலாய்
தேய்ந்திருந்தன வீடுகள்.

காணாமல் போயின
ஒவ்வொன்றாய்
ஒவ்வொன்றாய்-
கலகலப்பு படிக்கட்டுகள்.

வீடடைந்தவன்
வண்டியிலிருந்து இறங்காது
வண்டியோடு
வீட்டுக்குள் இறங்கியதைக் காண

நினைவில் வந்து போனது-

நாலுபேர் சேர்ந்து
நண்பனின் அண்ணன் பைக்கை
ரோட்டிலிருந்து
வீட்டுக்குள் ஏற்றியது.

பால்கனியில் நின்றவர் கையில்
தினசரியை திணித்துப் போனான்
பேப்பர்காரப் பையன்.

அரசியல்வாதிகளால்
நாடு வளர்ந்ததோ இல்லையோ
ரோடு வளர்ந்தது மேலே
அவர்களின் பினாமிகளால்.

நீரூற்றி காடு
வளர்த்தார்களோ இல்லையோ
மேலே மேலே
தாரூற்றி ரோடு வளர்த்தார்கள்.

வீதிகள் வளர்கின்றன-
அடுத்து ஒரு புரட்சிக்கான
மேடைகளாக.

விளக்கு

நீ ஏற்றிய 
இத்தனை அகல்விளக்குகளினும் 
என்னை கவர்ந்தது 
காதல் சுடரேந்திய 
உன் அகலக் கண்விளக்கே..!!

இது வேறொன்றுமில்லை....

இது வேறொன்றுமில்லை.
பேசித் தீர்த்தப் பின்
பேசாமல் தீர்த்துக் கொள்வது.

இது வேறொன்றுமில்லை.
அணைத்தலை விரும்பும்
அணையாத நெருப்பு

இது வேறொன்றுமில்லை.
எதனிடையும் நுழையும்
காற்றுக்கான சவால்.

இது வேறொன்றுமில்லை.
இலையில் விழுந்த
மழையின் துளி
அதன் நரம்பில் பயணித்தல்.

இது வேறொன்றுமில்லை.
மந்திரப் பாயில்
அந்தரப் பயணம்.

இது வேறொன்றுமில்லை
மண்ணில்
மானுடப் பயிர் செழிக்க
மறுக்க இயலா
மெத்தை விவசாயம்.

இது வேறொன்றுமில்லை.
தூண்டிலில் சிக்கியப் பின்
நீந்த துவங்குவது.


இது வேறொன்றுமில்லை.
கரை ஏறியப் பின்
குளிக்கச் செல்வது.

வியாழன், 19 செப்டம்பர், 2013

மனதோடு சில மழைக் காட்சிகள்..

கப்பலை நசுக்கிச்சென்ற சைக்கிளை நோக்கி
ஏதும் செய்வதறியாது சிறுவனவன்
கைதனை வீச குறிதவறி
வானத்தை கிழித்தது மின்னல்.

தானே முன்வந்து தொகுதி எம்.எல்.ஏ.
தங்கள் குறைகளனைத்தும் கேட்பதை
சந்தேகத்தோடு மக்கள் நோக்க
வானத்திலும் எங்கோ இடித்தது.

சிலக் குடைகள் தங்கள்
பாத்திரமறிந்துப் பங்காற்ற
பலக் குடைகளை திருப்பிமடக்கி
பாத்திரமாகவே ஆக்கியது பெருங்காற்று.

வானத்தையே மூடிவிடுமளவு
வருகிறது கோபம்.
முடியாது போய் பிளாஸ்டிக் விரிப்பால்
மூடிவிடுகிறான் பிளாட்பார வியாபாரி
தன் பழக்கடையை.

மழையை ரசித்தவாறு
எதிரே வந்துக்கொண்டிருந்தவள்
திடீரென அலைபேசியில்
யாரையோ அழைக்க ஆரம்பித்தாள்.
ஓயாமல் பேசும் தோழி
ஒருவேளை நினைவிற்கு வந்திருக்கலாம்.

பிளாட்பாரவாசிகளுக்கு அன்று
படுக்க கிடைத்தது பக்கத்து
''பள்ளி''யறை .

புதன், 4 செப்டம்பர், 2013

இதழ்மீது ஓர் சயனம்.

புள்ளினம் கண்டு மானிடமா..
மானிடம் கண்டு புள்ளினமா..

துவக்கியது யாரென்று தெரியவில்லை.
துவங்கியது இன்னும் முடியவில்லை.

முத்தத்தில்
கொடுப்பவரே எடுப்பவராம்..
எடுப்பவரே கொடுப்பவராம்..
மொத்தத்தில்
காதல்ஜோதி அணையாதிருக்க
கடைசி வரை தரும் ''பவரா''ம்.

இது
காதல் வளர்க்கும் ஓர் வேள்வி.
இதில்லையேல்
அங்கு காதலே ஓர் கேள்வி.

விழிமூடி இதழ்மீது ஓர் சயனம்.
வழிதேடி புதுஉலகில் ஓர் பயணம்.

கவிஞன் ஆக்கினாள் என்னை.

கருவிழிகள் இரண்டும்
வண்டுகளாய் உருள
கருங்கூந்தல் நிறம் கண்டு
கார்மேகம் மிரள
புன்னகைக்கு பின்வாங்கி
மல்லிச்ச்சரம் புரள - கண்டு
கவிதையெழுதாது என்செய்வேன்
கற்பனைகள் திரள.??


சுதந்திர நாள் சிந்தனை.

சுதந்திரம் பெற்று சுற்றித் திரிந்தோம்.
சுயமாய் சிந்திக்கக் கற்றோமா..?
வெள்ளையன் ஓட சுதந்திரம் பெற்றோம்.
வறுமையை விரட்டி பெற்றோமா..?
வியர்வை சிந்தி நாளும் உழைத்து
விதியிடம் வேதனை விற்றோமா..?
சிங்களன் சீனன் பாகிஸ்தான் காரன்
சீண்டிட கோபம் உற்றோமா..?
மொத்த இந்தியர் ஒற்றுமைக் காத்து
முதலிடம் உலகில் கைபற்றோமா..??


இது ஒரு மழைக் காலம்..

மழை மாத்திரமே
பூக்கச் செய்கின்றன
கருப்பு மலர்கள்-
குடை.

திரையரங்க நெருக்கபரிபாலனம்
தொடர்ந்து நீடித்தது மழையால்
ஒற்றை குடையின் கீழ்.

வாரியடித்த சேற்றுக்கு
வருந்தாமல் விரைகிறார்கள்
முன்னாள் பாதசாரிகள்.

தலைமறைவாய் காத்திருக்கும்
திறந்த சாக்கடைகள்
குழிப்பறிக்கு.

பிள்ளைகள் விட்ட கப்பல்கள்
மூழ்காதிருக்க
பட்டென்று விட்டிருக்கலாம்
மழை.

ரங்கோலி.

ஊரெல்லாம் நீர்தெளித்து கழுவி
வான் போட்ட கோலம்
போனதெப்படி வானகத்திற்க்கே நழுவி..??!!

கார்மேக கண்ணா..

நாதங்கள் குழலில் எழுப்பி இந்த
நானிலத்தை மயக்கிய நந்தா-உன்

பாதங்கள் வரைந்து நாங்களெதிர்
பார்த்திருந்தாலும் உன் வரவுக்காக

பேதங்கள் இல்லாப் பெருமழைப்
பொழியும் கருமேகமாகி- வரும்

மாதங்கள் எல்லாம் மனம்குளிர
மேலிருந்தே அருளிடுவாய் மாதவா.

முன்ஜென்ம முடிச்சு.

பாய்ந்து வரும் ரயில் அதனை 
பார்க்க ஓடி வந்தனையோ..

ஓய்ந்து நின்று மூச்சு வாங்கி 
ஓயா தென்ன சிந்தனையோ..

மாய்ந்து மாய்ந்து நீ  யோசிப்பது 
முன் ஜென்மக் காதலையோ..

ஆய்ந்து அதனை நினைவுக் கூற 
அட சின்னமூளை போதலையோ.

சாய்ந்து வெறித்து நீ நோக்கையிலே 
சதிகாரக் கும்பல் வண்டவாளம் -

தோய்ந்த நினைவுகள் தந்திடலாம் 
தேய்ந்து வெளுத்த தண்டவாளம். 

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

ஜாலம் செய்யும் காலம்.

முட்களிடை சிக்கியும்
கிழிபடாது காயங்களின்றி
நழுவும் காலம்.

உடன் விரையும் நமக்கு 
உண்டோ
"உள்ள"காயங்களின் கணக்கு ?.

விரைந்தபடியே காலம்
நம் வலிகளை
மறைக்கச் செய்யுது ஜாலம்.

கண்மூடித்தனமாய் விரையும்
காலம்
தீர்ப்புகளையும் வீசிச் செல்கிறது
திருத்தமாய்
யானைகளுக்கும்,பூனைகளுக்கும்..