வியாழன், 28 பிப்ரவரி, 2013

சுஜாதா.

உற்றதும்,மனதிற்கு உகந்ததும் யாதெனில்
கற்றதும்,பெற்றதும் விகடனில்-மற்றததில்
'பிசாத்தா'என்றால் இல்லையனைத்தினும்
சுஜாதா படிக்க சுகம்.

சனி, 23 பிப்ரவரி, 2013

ஞானோதயம்.

நீ துணி உலர்த்த வந்தபோதுதான்
முதன்முதல் உன்னைப் பார்த்தேன்.
அப்போது சத்தியமாய் தெரியாது
நீ என்னையும்
காயவைக்கப் போகிறாய் என்று.


                                                                           -  வா.சுகன்ப்ரியன்.31/01/2013.

சிறுவனிடம் தோற்ற சிங்களர்.

முக்கிய எதிரியை அழித்த பின்னும்
பேடிகளுக்கு
மூளையில் பதிந்த பயம் தீரவில்லை.

பயத்தின் சுவடோ,அழுத தடமோ
பாலகனின் பளிங்கு விழிகளில் இல்லை.

உண்மையான வீரத்தின் ஆழமும்
உதயமாகப் போகும் தமிழ் ஈழமும்
பேடிகளின் கண்களுக்கு புலப்பட்டிருக்க வேண்டும்-
பாலகனின் பளிங்கு விழிகளில்.

தின்றிட ஏதோ அவனுக்கு தந்துவிட்டு
கொன்றிட அவனை ஆலோசனை நடத்திவிட்டார்கள்
அடுத்த அறையில்.

என்ன சொல்லி அழைத்து சென்றிருப்பார்கள் அந்தக்
குழந்தையை கொல்வதற்கு காடையர்கள்..??

''விளையாடலாம் வா'' என்றா..??

அட மடையர்களே..
அதிலும் தன் வீரமரணம் மூலம்
உங்களை மட்டுமல்ல
உலகத்தோர் உள்ளங்களையும் வென்றது அவன்தானே.

இந்த புகைப்படம் பார்த்து கற்றுக் கொள்-
எதிரிகளிடம் சிக்கினாலும் ''சிங்கிளா''
எப்படி இருப்பதென்பதை சிங்களா.
- வா.சுகன்ப்ரியன்.21/02/2013.

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

ஆதலினால் காதல் செய்வீர் அகிலத்தோரே...

நீ புத்தகம் வாசிப்பதை
ரசித்து பார்ப்பேன்.
அதைவிட நான்
அதிகம் ரசிப்பது-என் மீது
நீ புகார் வாசிப்பதை..!!

சமயத்தில் மோர்சாதம்
போதுமென்பேன்.
வடித்தது வீணானதென்று
வெடித்து சிதறுவாய் நீ.
மோர் சாதத்திற்கு
மிளகாய் வற்றலாகி
சுவைகூட்டும் உன் கோபம்.

ஒவ்வொருமுறை என்மீது நீ
கோபப்படும்பொழுதும்
சுலபமாய் புரிந்துக் கொள்ளமுடிகிறது
என்னால்-அது
யார் மீதுள்ள கோபம் என்று..

ஒரேஒருமுறை நான்
கோபித்துக் கொண்டதுண்டு உன்னை.
சண்டைப் போடாமல் என்னோடு - ஒரு
'சண்டே'யை வீணடித்ததற்காக.

பழுத்த ஊடலே கோபம்-ஆதலின்
பொறுத்தால்
பெறலாம் பெரும் லாபம் .

காதல் நம்மை மீட்டும் வாத்தியம்.
காதலால் மட்டுமே எதுவும் சாத்தியம்.

ஆதலினால் காதல் செய்வீர் அகிலத்தோரே...
                                                                                                 -வா.சுகன்ப்ரியன்.
14/02/2013.

புதன், 13 பிப்ரவரி, 2013

சகோதரி வினோதினி. (ஒரு கருகிய கனவு.)

வாசித்தால் வேதனை மிஞ்சுது
  வஞ்சியவள் மரணச் செய்தியை.
நேசித்ததை மறுத்ததற்கு ஐயகோ
  நேர்ந்திட வேண்டுமோ இக்கொடுமை.
யோசித்தால் வழியுண்டு ஆயிரம்
  யோக்கியமாய் அவள் அன்புப் பெற,
யாசித்தும் பெற்றிடலாம் தவறில்லை
 யாரும் யாரிடத்தும் காதலை,
பூசிக்கவேண்டியப் பேரழகை இப்படி
  பொசுக்கி அழிக்க பேடியவன்
''ஆசிட்''டை அண்டிப் போவானா..?
   அவனும் நல்ல கதியில்தான் சாவானா..?

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

நிரா(லா)சை

சோறூட்டப் பட்டதும்
குழந்தைகள்
உறங்கப் போய்விடும்
உண்மைத் தெரியாமல்
விளையாட வருவார்கள்
என்றெண்ணி
ஒவ்வொருநாள் இரவும்
காத்திருந்து காத்திருந்து
ஏக்கத்தில்
இளைத்து தேய்ந்தது நிலா..!!

திங்கள், 11 பிப்ரவரி, 2013

காவ(த)ல் தேவதை

நினைவுகளின் வீதியில் நின்றிருந்தேன்.

என்றும்போல் அன்றும்
எனைக் கடந்தாய் பாராது.

சற்று தூரம் சென்ற நீ
திரும்பியபோது பரபரப்பானேன்.

எதேச்சையாய் பார்ப்பதுபோல்
என்னை பார்த்த போது
உன் பார்வையில் சிதறிய
உள் அர்த்தங்கள்
அப்போது புரியவில்லை.

காதலைத் தாண்டி நீ யோசித்த முதிர்ச்சி
எனக்கு தருகிறது
காலங்கள் தாண்டி இப்போது அதிர்ச்சி.

ஏதோ ஒரு ''தர்ம''புரியில்
ஏதோ ஒரு தர்மவானுக்கு
தர்மபத்தினியானவளே ...

அன்று நீ அடக்கிவைத்தது
உன் உள்ளக் காதலை மட்டுமல்ல-
நம் ஊர் கலவரத்தையுமல்லவா ...!!