நான் புறப்பட்ட நேரம்
இடுப்பில் சீப்போடு வந்தெதிரில்
அமர்ந்தாய்.
பின்னியிருந்த சடையை
உன் விரல்கள்
பிரித்த லாவகத்தில்
நாட்டிய முத்திரைகள்
நிறைவாய் தென்பட்டன.
ஆர்வமாய் அவதானித்தேன்
இதென்ன புது கூத்தென்று.
ஆச்சர்யம் உன் விழிகளில்
அருவியாய் பொங்கி வழிய
இடம்,வலம் கழுத்தை ஒடித்து
இருள்கூந்தலை பிஞ்சு விரல்களால்
பின்தள்ளி நீவுகையில்
நிம்மதியும்,சாந்தமும்
நிறைந்திருந்தது நின் முகத்தில்.
வாளை உருவும் வீரம்
இடுப்பிலிருந்து நீ
சீப்பை எடுத்தபோது தெரிந்தாலும்
சிக்கெடுத்து சீவத் தொடங்கியதும்
அங்கே-
சிந்தி சிதறியது எல்லாம்
சிருங்காரம்.
உதிர்ந்து சீப்பில் சிக்கிய முடிகண்டு
அதிர்ந்து நீ பயந்தது
அற்புத பாவம்.
சிங்கப்பல் கடித்து,வாய் சுருக்கி
கட்டைவிரல் நகங்களுக்கிடையில்
கண்டெடுத்த ஈரையும்,பேனையும்
நீ நசுக்கியபோது
நச்சென்று புலப்பட்டது
வெறுப்பும்,கோபமும்.
பின்னி முடித்த கூந்தல் உன்
பின்னிரு மத்தளங்கள் மேலாட
நாணி நீ ஓடுகையில்
நிறைவுற்றிருந்தது
நான் பார்க்க புறப்பட்ட நாட்டியம்.-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக