காதலிக்கிறாள் ஒருத்தி.
காததூரம் தள்ளிநின்று
காதலிக்கிறாள் இன்னொருத்தி.
எனினும் கதாநாயகனின் கனவு
தீர்மானிக்கிறது -
யாருக்கு அவன் கண்ணன் என்பதையும்..
யாருக்கு அவன் அண்ணன் என்பதையும்..
கதாநாயகி குளிக்கும்போது
கரையிலுள்ள அவள் ஆடைகளை
முகர்ந்தபடி முறைக்கிறான் ஒருவன்.
ஆற்றிலேயே இறங்கி அவளையே
முகர்ந்தபடி இறுக்குகிறான் ஒருவன்.
எனினும் கதாநாயகியின்
நாணத்தில் கவிழும்முகம்
தீர்மானிக்கிறது -
யார் அவள் இதயக்கள்ளன் என்பதையும்..
யார் அந்த படத்தின் வில்லன் என்பதையும்..
இறுதிக் காட்சியில்
இயக்குனர் தீர்மானிக்கிறார்-
காதல் செத்து காதலர்கள் வாழ்ந்தார்களா என்பதையும்...
காதலர்கள் செத்து காதல் வாழ்ந்ததா என்பதையும்..
நாம் தீர்மானித்தபடி
எதுவும் நடந்துவிட்டால் இங்கு
சுவாரஸ்யமின்றிப் போய்விடுவது
ரசிக்கவந்த சினிமா மட்டுமல்ல-
ரகளையான நம் வாழ்க்கையும்தான். -வா.சுகன்ப்ரியன். 21/03/2013.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக