திங்கள், 29 அக்டோபர், 2012

கிராமத்தோடு ஒரு கண்ணாமூச்சி.

நமக்கொன்றும் இல்லை அங்கெனினும்
பால்ய நினைவுகளை மீட்டெடுக்க
தவிர்க்க முடியாததாகி விடுகிறது
தாத்தா ஊர்நோக்கி ஓர் பயணம்.

பச்சை பசேலென்றிருந்த ஊர்
பல வண்ணத்தில் இருந்தது
பல்கிப் பெருகிய வீடுகளால்.

அடையாளம் மறைத்துக் கொண்டு
என்னோடு கண்ணாமூச்சி
ஆடத் தொடங்கிவிட்டது ஊர்
ஆலமரம் காணாமல் நான்
திடுக்கிட்ட இடத்திலிருந்தே.

ஆடிக் களித்த மைதானங்கள்
ஓடி ஒளிந்த திண்ணை வீடுகள்
இன்று எனக்கு
ஆட்டம் காட்டுகின்றன ஒளிந்தபடி.

தேடித் தேடி நானே
காணாமல்போன கணத்தில்
கண்டுபிடித்து என்னை மீட்டது
குஜிலி அம்மாவின் குரல்...
''நீ.. ரயில்வே தாத்தா பேரன்தானே..''

தொந்திரவில்லாமல் கண்டுப்பிடித்தது
தொகுப்பு வீடுகளுக்கடியில்
தொலைந்துப் போன ஏரியை மட்டும்தான்.
அதனருகில் குடியிருந்த
ஏரிக்கரை பிள்ளையாரால்..!!

அடுத்தமுறை
உன்னிலிருந்தே துவக்குகிறேன்
ஊரோடான கண்ணாமூச்சி விளையாட்டை...     








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக