ஞாயிறு, 28 அக்டோபர், 2012

மன வாசனை.

வாவென்று வேண்டுகிறோம்.
வந்தால்
வாசல்கதவோடு சேர்த்து
சன்னலையும் சாத்திக் கொள்கிறோம்.

வருத்தப்படாத
வித்தியாச விருந்தினன் நீ.

முன்வாசலில் மரம்செடிகளுக்கு
முத்தங்களை இறைத்துவிடுகிறாய்.
பின்வாசலில் காய்ந்தக் கிணற்றை
முடிந்தவரை நிறைத்து விடுகிறாய்.

மூடிய ஜன்னல்களுக்குள்
கப்பல்கள் தயார்
கத்தியின்றி,கத்திக் கொண்டு..

விளையாட விடாதவருத்தத்தில்-

மழையே,மழையே போ.. போ..
குட்டிகளின் கலாட்டா
ஆங்கிலத்தில் கத்திக் கொண்டு.

நிராகரிப்புகளால்
நீ வடிக்கும் கண்ணீர்
தனியேத் தெரிவதில்லை.

முதன்முறை
மண் வாசனையோடு உன்
மன வாசனையும் முகர்ந்தேன்.

சோற்றில் கைவைக்க அமர்ந்தவன்
எழுந்து சட்டையிட்டு
சேற்றில் கால்வைத்து வெளிவந்தேன்.

ஜலதோஷத்திற்கு பயந்து
வீடுள்ளவர்கள் வீட்டினுள்ளே-
சுவர்களே நனைந்தபடி.

சந்தோஷமாய் ஆட்டத்தோடு
வீடற்றவர்கள் ரோட்டினிலே-
அவர்களே நனைந்தபடி.

வாவென்றதும் வந்த மாமழையே
பூமி நோக்கி விரைந்தபடி நீ..
ஆரத் தழுவிக் கொள் என்னை
வானம் நோக்கி கரைந்தபடி நான்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக